சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அங்கு இந்தியர்கள் போட்டு வைத்த பணம் கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில், இந்தியர்கள் பணம் ரூ.23 ஆயிரம் கோடி இருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு இறுதியில், இந்தியர்கள் பணம் வெறும் ரூ.4 ஆயிரத்து 500 கோடியாக குறைந்துள்ளது. சுவிஸ் தேசிய வங்கி இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த 1987-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் இத்தகைய புள்ளி விவரத்தை அவ்வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 30 ஆண்டுகளில், கடந்த ஆண்டுதான், இந்தியர்கள் பணம் மிகவும் குறைவாக உள்ளது. அதுமட்டுமின்றி, மோடி அரசு பதவிக்கு வந்த 3 ஆண்டுகளில், இந்தியர்கள் பணம் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. கருப்பு பண மீட்பு நடவடிக்கைக்கு பயந்து, இந்தியர்கள் தங்கள் பணத்தை வேறு நாடுகளுக்கு மாற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.