மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதா மோகன்சிங், பீகாரில் சாலையோரத்தில் சிறுநீர் கழித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் வேளாண்மை துறை அமைச்சராக இருப்பவர் ராதா மோகன்சிங்.
பீகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு சம்பரன் தொகுதியில் இருந்து தேர்வாகி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
சமீபத்தில் ராதாமோகன் சிங் பீகாரில் உள்ள தனது தொகுதியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தார். பாட்னாவில் இருந்து மோதிஹரி எனும் ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நடுவழியில் அவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதை அடக்க முடியாத அவர் காரை நிறுத்த சொல்லி இறங்கினார்.
பிறகு அவர் சாலையோரமாக சென்று சிறுநீர் கழித்தார். கமாண்டோ வீரர்கள் சற்று தொலைவில் துப்பாக்கி ஏந்தியபடி அவருக்கு பாதுகாப்பாக நின்றனர்.
மத்திய மந்திரி ராதா மோகன்சிங் சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பதை யாரோ ஒரு மர்ம நபர் மறைந்து இருந்து படம் பிடித்தார்.
அந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிலும் அந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பிரதமர் மோடி ஒருபக்கம் நாட்டை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது மறுபுறம் மத்திய மந்திரி ராதா மோகன் சிங் சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.