பள்ளிக்கு செல்லும் இளம் மங்கையாக வரும் டெல்லாவின் பெற்றோர் மகளை என்ன செய்கிறாள் என்பதை கண்காணிப்பதில்லை. மேலும் மகளுக்கு மொபைல் போன், கணினி, இணையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கின்றனர். அதன்விளைவாக பள்ளிக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் டெல்லா, பாடத்தை கவனிக்காமல் தனது காதலுடன் குறுஞ்செய்தியை பகிர்ந்து வருகிறார்.
இவ்வாறாக பள்ளி செல்லும் டெல்லாவுக்கு சமூக வலைதளம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாகவும் மாறிவிடுகிறது. அந்த காதலால் டெல்லாவுக்கும் அவரை காதலிக்கும் நபருக்கும் இடையேயான நெருக்கம் அதிகமாகி, அடுத்தடுத்த கட்டத்திற்கும் செல்கின்றனர்.
அதனால் டெல்லா சந்திக்கும் பிரச்சனைகள்? அவளது பெற்றோர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதனால் என்னென்ன மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்? என்பதே படத்தின் கதை.
பள்ளி செல்லும் இளம் பெண்ணாக நடித்திருக்கும் டெல்லாவின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மிகைப்படுத்தாமல் கொடுத்திருக்கிறார். வின்னர் சொர்ணா, கிருஷ்ணா, நெல்லை சிவா என அனைவருமே கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
பெற்றோர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இந்த படத்தை உருவாக்கியிருப்பதற்காக ஷக்தி வசந்த பிரபுவுக்கு வாழ்த்துக்கள். இன்று உலகம் சுருங்கிவிட்டது. உள்ளங்கையில் உலகத் தொடர்பு சாத்தியமாகியுள்ளது. இதனால் பல நன்மைகள் மட்டுமல்ல தீமைகளும் விளைகின்றன. படிக்கிற வயதில் பிள்ளைகள் சமூக ஊடகங்களின் மயக்கத்தில் மூழ்கி தங்கள் நேரத்தை விரயமாக்குவதுடன் தகாத செயல்களில் இறங்கி, தங்கள் எதிர்காலத்தையே தொலைத்து விடுகிற விபரீதமும் நடக்கிறது.
வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு என்ன தப்பு செய்தாலும் வெளியே தெரியாது என்கிற எண்ணம் உள்ளது. இது மிகவும் தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சமூக ஊடகங்களில் என்னென்ன செயல்பாடுகளில் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு பெற்றோரும் விழிப்புணர்வோடு எச்சரிக்கை உணர்வும் பெற வேண்டும் என்பதை மையக் கருத்தாக கொண்டிருக்கின்றனர்.
சித்தார்த் பாபுவின் இசையில் பின்னணி இசை சிறப்பாக வந்திருக்கிறது. கே.பி.வேல்முருகனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `ஏன் இந்த மயக்கம்’ பெற்றோருக்கான விழிப்புணர்வு.