பீகாரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பேர் வீடிழந்தனர். ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர். 20 மாவட்டத்தில் பாதிப்பு இருந்தது.
இந்நிலையில், ஆற்றங்கரையோர வெள்ளத் தடுப்புச் சுவர்களில் எலிகள் ஓட்டை போட்டதுதான் இந்த வெள்ளத்துக்குக் காரணம் என்று பீகார் மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் கூறியுள்ளார்.
லாலன் சிங் என்ற பெயராலும் அறியப்படும் இவர் மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறையையும் கவனிக்கிறார்.
வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர், வெள்ளத் தடுப்புச் சுவரோரம் குடியிருக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருக்கும் தானியங்களால் கவரப்பட்டு அங்கே எலிகள் வருவதாகத் தெரிவித்தார்.
இப்படி வரும் எலிகள் வெள்ளத் தடுப்புச் சுவர்களில் போட்ட ஓட்டை அச்சுவர்களை பலவீனப்படுத்தியதாகவும், வெள்ளம் புகக்காரணமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாலைகள் மற்றும் பிற கட்டுமானங்களை கட்டும்போது, முறையான வடிகால் வசதிக்கான தேவையை அரசு கணக்கில் கொள்வதில்லை என்று செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் பீகாரில், கைப்பற்றப்பட்ட பல்லாயிரம் லிட்டர் மதுபானங்களை எலிகள் குடித்துவிட்டதாக இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.