நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி (வயது 45). நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் கடந்த 20 வருடங்களாக நடித்து வருகிறேன். எனக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். ஆரம்பத்தில் என் மனைவியோடு இல்லற வாழ்க்கை நல்லபடியாக இருந்தது. மின்சார வாரிய ஊழியர் ஒருவரால் எனக்கும், எனது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் கடந்த 4 மாதங்களாக பிரிந்து இருக்கிறோம்.
இந்த பிரச்சினையில், எனக்கு உதவி செய்யும்படி எனது நண்பரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் பேசினேன். ஆனால், அவர் எனக்கு நல்லது செய்யவில்லை. அதற்கு மாறாக எனக்கும், எனது மனைவிக்கும் பிரிவினை ஏற்படுத்திய மின்சார வாரிய ஊழியரோடு கைகோர்த்துக்கொண்டார். என்னை பற்றி தவறான தகவல்களை அவர் எனது மனைவியிடம் சொன்னார்.
இவ்வாறு நடிகர் தாடி பாலாஜி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி ஏற்கனவே கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.