முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Rolls-Royce நிறுவனம் தனது பறக்கும் கார் திட்டத்தை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வீதி போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுத்துவதாகவும், நேர விரயம் செய்வதாகவும் வேகமாக மாறிவருவதால் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான Rolls-Royce, ஹெலிகாப்டரை போன்று செங்குத்தாக மேலெழும்பி, தரையிறங்கும் (EVTOL) மற்றும் அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் வேகத்தில் நான்கு அல்லது ஐந்து பேரை சுமந்துகொண்டு தொடர்ந்து 800 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் கார் தயாரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் இந்த காரை வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், இது தனிப்பட்ட, வர்த்தக, சரக்கு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்குமென்று கூறியுள்ளது.
பிரபல இணையதள பிரௌசரான (உலவி) ஒபேரா, கைபேசிக்கான உலகின் முதலாவது கிரிப்டோகரன்சி வேலட்டை அறிமுகம் செய்துள்ளது.
பிட்காயின், ஈத்திரியம் போன்ற பலவகையான கிரிப்டோகரன்சி என்னும் மின்னணு பணங்களின் பரிமாற்றத்திற்கு உலகின் பல நாடுகளிலும் தடைவிதிக்கப்பட்டாலும், அவற்றின் பயன்பாடு குறைந்தபாடில்லை. இந்நிலையில், “எதிர்காலத்தில் பணப்பரிமாற்றத்தை ஆட்சி செய்யபோகும் கிரிப்டோகரன்சியை ஒபேரா கைபேசி செயலியிலேயே இணைத்து அதற்கான முன்னோட்ட பதிப்பை வெளியிடுவதாக” அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், கிரிப்டோகரன்சி பறிமாற்றங்களை பிரைவேட் மோடில் கைபேசியிலேயே மேற்கொள்ள முடியும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியின் பீட்டா (முன்னோட்ட) பதிப்பில் ஈத்திரியம் என்ற மின்னணு பண வகையை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், விரைவில் அனைத்து வகை கிரிப்டோகரன்சிகளும் இதில் இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.