கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை பிரிகிடி, அது தனது சொந்த விருப்பம், அதைப் பற்றி விமர்சிக்கவோ, விவாதிக்கவோ அவசியமில்லை என்று காட்டமாக பதிலளிக்கிறார்.
“பெண்கள் வயதான பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதை விமர்சிப்பவர்கள், 60 முதல் 70 வயதுள்ள ஆண்கள் தந்தையாவது பற்றி ஏன் விமர்சிப்பதில்லை? அப்போது மட்டும் குழந்தை பெற்றுக் கொள்வது தனிமனித விருப்பம், சுதந்திரம் என்று ஒதுங்கிக் கொள்வது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்.
“இது அனைவருக்கும் பிடிக்காது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன், ஆனால் இது என்னுடைய வாழ்க்கை, எனக்கும், என் கணவருக்கும் இடையிலான உறவு சுமூகமாக இருக்கிறது, குழந்தை பெற்றுக் கொள்வது, வளர்ப்பது பற்றி நாங்கள் இருவரும் முடிவு செய்திருக்கிறோம்” என்று பிரிகிடி ´பீபிள்´ என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
39 வயது மட்டியா டெஸ்ஸியை 2006 ஆம் ஆண்டு மணந்த பிரிகிடி, தனது நாற்பது வயதில் கருமுட்டைகளை உறைநிலையில் சேமித்து வைத்துள்ளார். தன்னுடைய சொந்த கருமுட்டையில் இருந்து கரு தரிக்கும் வாய்ப்பு 3-4% அளவிலேயே இருந்தபோதிலும், 14 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.வி.எஃப் என்னும் செயற்கை கருதரிப்பு முறை மூலம் கரு தரித்தார் பிரிகிடி.
குழந்தையே இல்லாத பிரிகிடி தற்போது தான் செயற்கை கருதரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார் என்று நினைக்க வேண்டாம். டிஸ்ஸியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே சில முறை திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் பிரிகிடியின் ஐந்தாவது குழந்தை தான் கடந்த மாதம் அவர் பெற்றெடுத்த பெண் குழந்தை ஃப்ரிடா.
40 வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வது 1990 க்ளுக்குப் பிறகு அதிகரித்துள்ளது.
பிரிட்டன் தேசிய தரவு அலுவலகம் 2016 இல் வெளியிட்ட தரவுகளின் படி, பெண்கள் கருதரிக்கும் விகிதம் கணிசமாக குறைந்துள்ள நிலையில், 40 வயதுக்கு அதிகமான பெண்கள் கருதரிப்பது 2% வரை அதிகரித்துள்ளது.
50 வயதுக்கு அதிகமான பெண்கள் கருதரிப்பது பற்றிய விகிதம் குறித்து இந்த தரவுகள் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கருதரிப்பு சிகிச்சை மேற்கொள்வது கணிசமாக அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
50 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் அதிகரித்திருப்பதால் அவர்களுக்காக சிறப்பு கவனத்துடன் தேவையான தகவல்கள் கொண்ட பிரசுரங்களை வடிவமைத்துள்ளதாக கேர் கருதரிப்பு குழும நிறுவனங்களின் இயக்குநர் டொக்டர் ஜானினே எல்சன் கூறுகிறார்.
வயது முதிர்ந்த பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்தாலும், வயது அதிகரிக்கும் போது, அபாயங்களும் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஜானினே எல்சன் கூறுகிறார்.
பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் குழந்தை பெற முடிவெடுத்தால், அவர்கள் பிற பெண்களிடம் இருந்து கருமுட்டைகளை நன்கொடையாக பெற்று கருதரிப்பார்கள். வெகு சிலரே எதிர்காலத்தில் பயன்படலாம் என்ற நினைப்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுடைய இளம் வயதிலேயே கருமுட்டைகளை சேமித்து வைத்திருப்பார்கள் என்று அவர் கூறுகிறார்.
“சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு அதிகரிப்பது, மார்பக புற்றுநோய் என பலவிதமான நோய்களை 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் சாத்தியங்கள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு நாங்கள் தீவிரமான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது” என்று அவர் கூறுகிறார்.
வயது முதிர்ந்த காலத்தில் தாய்மை அடைவதில் ஆபத்துகள் அதிகம். 30 களின் பிற்பகுதியில் கருதரிக்கும் பெண்களே உயர் ரத்த அழுத்தம், வலிப்பு நோய், கர்ப்பகால நீரிழிவு நோய் என பல்வேறு நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், அதிக வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் தங்களுடைய சொந்த கரு முட்டைகளை பயன்படுத்தினால், அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அபாயங்களும் கணிசமாக அதிகரிக்கிறது.
50 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள், தாய்பால் சுரப்பு, தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதை விட, பிரசவத்திற்கு பிறகு மெனோபாஸ் நிலையை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம். அது அவர்களுக்கு வேறுவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
“பொதுவாகவே கர்ப்ப காலம் முடிந்ததும், தாய்க்கு ஹார்மோன்கள் சமநிலை மாறுபடுவதோடு, மாதவிடாய் ஏற்படுவதில் பல மாறுதல்கள் ஏற்படும். அதோடு, புதிதாய் உலகிற்கு வந்த சிசுவை பராமரிப்பதற்காக சரியான தூக்கமும் இருக்காது. வயது முதிர்ச்சியால் ஏற்படும் பலவீனம், சோர்வுடன் இது போன்றவையும் சேர்ந்து அவர்களுக்கு மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
பிற தாய்மார்களிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்காமல் போகலாம். குழந்தைகள் பாடசாலைக்கு செல்லும் போது, முப்பது முதல் நாற்பது வயதுக்கு இடைப்பட்ட வயதில் இருக்கும் தாய்மார்களையே அதிகம் காணமுடியும். 40 -50 களில் இருக்கும் தாய்களை பார்ப்பதே குறைவு தான்.
லண்டன் வுமன்ஸ் கிளினிக்கில் மூத்த ஆராய்ச்சியாளராக பணிபுரியும் டொக்டர் ஜென்னெப் கர்டின், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் குடும்ப ஆராய்ச்சி மையத்திலும் சில ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
அவரது கருத்துப்படி, “சக தாய்மார்களிடம் இருந்து எல்லா தாய்மார்களுக்குமே ஆதரவு தேவைப்படும். ஆனால், வயது முதிர்ந்த காலத்தில் தாயாகும் பெண்களுக்கு பொதுவான ஆதரவு சக தாய்மார்களிடம் இருந்து கிடைப்பதில்லை.”
வயது முதிர்ந்த பின் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆண்களை விட பெண்கள் கடுமையான விமர்சன்ங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற பிரிகிடி நைல்செனின் கூற்றை டொக்டர் ஜென்னெப் கர்டின் ஒப்புக்கொள்கிறார்.
“56 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ஜோர்ஜ் க்ளூனி இந்த அளவு விமர்சிக்கப்படவில்லை. வயதான ஆண்கள் தந்தையாகும் போது பெரிய அளவு சர்ச்சைக்குள்ளாவதில்லை. குழந்தை வளர்ப்பில் அவர்களுக்கு அதிக பொறுப்பில்லை என்று கருதப்படுகிறது.
“ஆனால் மறுபுறத்தில் பெண்கள் வயதான பிறகு குழந்தை பெற்றுக் கொண்டால் அதற்காக கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர்.”
54 வயது வரையிலான பெண்களுக்கு நன்கொடை கருக்களை கொண்டு கருதரிப்பு சிகிச்சை அளிக்கிறது லண்டன் வுமன்ஸ் கிளினிக்.
“தேசிய அளவில் அதிகபட்ச வயதோ, தேதியோ நிர்ணயிக்கப்படாத்தால், குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு அதிகபட்ச வயதை நாங்கள் முடிவு செய்கிறோம்.”
2004 ஆம் ஆண்டுடன் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கருவை உறை நிலையில் பாதுகாக்க முன்வரும் பெண்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது.
பிரிட்டன் தேசிய சுகாதார சேவைகளின் கீழ் ஐ.வி.எஃப் சிகிச்சை இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. தற்போதைய விதிமுறைகளின் பரிந்துரைகளின் படி, 42 வயது வரையிலான பெண்களுக்கு செயற்கை கருதரிப்பு மூலம் குழந்தை பெறுவதற்கு நிதியுதவி வழங்கலாம்.