கர்நாடகா மாநிலம் பெல்காவி (பெல்காம்) மாவட்டத்தின் புறநகர் பகுதியில், மொபைல் கேம்களுக்கு அடிமையான 21 வயது இளைஞர் ஒருவர், தனது தந்தையின் தலையை வெட்டி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் செய்தி இந்தியாவையே அதிர வைத்துள்ளது.
கல்வியில் ஆர்வம் இல்லாத ரகுவீர் கும்பார், திறன்பேசிகளில் விளையாடப்படும் பப்ஜி என்ற விளையாட்டுக்கு அடிமையானார்.
ரகுவீர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி இருந்ததாகவும், பப்ஜி விளையாட திறன்பேசியை ரீ-சார்ஜ் செய்வதற்கு தந்தையிடம் பணம் கேட்டதாகவும் பிபிசியிடம் பேசிய பெல்காவி மாவட்டத்தின் துணை ஆணையர் பிஎஸ் லோகேஷ் குமார் தெரிவித்தார்.
அப்போது இருவருக்குமிடையே பிரச்சனை எழுந்ததாகவும், அதிகாலை நேரத்தில் தந்தை சேகரப்பா அறைக்குள் சென்று தாயை வெளியே போகும்படி சொல்லிவிட்டு முதலில் தந்தையின் கால்களை ரகுவீர் துண்டித்து பின் தலையையும் ரகுவீர் வெட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறதாக தெரிவித்தார் போலீஸ் உயரதிகாரி லோகேஷ்.
தாயின் அலறல் சத்தத்தை கேட்டு கூடிய அக்கம் பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து ரகுவீர் கைது செய்யப்பட்டார்.
காவல் துறையில் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றவர் கொலை செய்யப்பட்ட சேகரப்பா ரேவப்பா கும்பார். கொலை செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்பாகதான் காவல்துறையிடம், தனது மகன் திறன்பேசி மற்றும் பப்ஜி விளையாட்டு அடிமையாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சேகரப்பா காவல் நிலையம் சென்றதுக்கு முக்கிய காரணமே அவருடைய மகன் ரகுவீர்தான். திறன்பேசியை ரீ-சார்ஜ் செய்ய பணம் கொடுக்காத தந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்கத்துவீட்டு ஜன்னல் மீது கல்லெறிந்துள்ளார்.
ஆனால், தந்தையை கொலை செய்யும் அளவுக்கு ரகுவீர் துணிந்தது தங்களுக்கு பெரிய ஆச்சரியமில்லை என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
“மொபைல் கேம்களுக்கு அடிமையான குழந்தைகளிடமிருந்து பெற்றோர் திறன்பேசியை பறித்தாலோ அல்லது விளையாட அனுமதி மறுத்தாலோ எரிச்சலும், கோபமும் அதிகரித்து காணப்படுகிறது,” என்கிறார் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் மருத்துவர் மனோஜ் குமார் ஷர்மா.
உண்மையிலேயே பப்ஜி விளையாட்டு அதன் போட்டியாளர்களை மூர்க்கத்தனமாக மாற்றுகிறதா என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை என்று கூறும் மருத்துவர் ஷர்மா, இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அடிமையான குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் இருப்பதை பெரும்பாலான பெற்றோர்கள் பார்த்திருப்பதாக ஒப்புக் கொள்கிறார்.
குழந்தைகள் இப்படி மூர்க்கத்தனமாக மாறுவதற்கு வெளியுலக தொடர்புகள் இல்லாததும் ஒரு காரணம் என்றும், அப்படி அதுபோல விளையாட்டுகளை விளையாடவில்லை என்றாலும் அவர்களின் சமூக ஊடக தொடர்புகள் மற்ற விளையாட்டாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு அவை மட்டும்தான் உலகம் என நம்புகிறார்கள் என்றும் ஷர்மா கூறுகிறார்.
பெங்களூருவில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் அமைந்திருக்கும் ஷட் (SHUT) எனப்படும் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வ பயன்பாட்டிற்கான சேவை பிரிவில் சிகிச்சை பெற வரும் 10 பேரில் 7 முதல் 8 பேர் வரை தொழில்நுட்பத்தை அளவுக்கதிமாக பயன்படுத்தக்கூடியவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறார் மருத்துவர் ஷர்மா.
திறன்பேசிகள் மற்றும் மொபைல் கேம்களுக்கு அடிமையாவது குறித்து 3 முதல் 4 புகார்கள் கிராமப்புற பகுதிகளிலிருந்து வருவதாக வட கர்நாடகாவில் உள்ள ஹுப்ளியில் அமைந்திருக்கும் மனாஸ் மனநல மருத்துவமனைவில் பணியாற்றும் மருத்துவர் குல்கர்னி கூறுகிறார்.