அரசியல் செயல்பாடுகளில் இறங்கும் எண்ணம் தனக்கு கிடையவே கிடையாது என நடிகர் சித்தார்த் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடிகர் சித்தார்த் நடித்த ´சிவப்பு, மஞ்சள், பச்சை´ திரைப்படம் வெளியானது. இந்த சூழலில் பிபிசி தமிழ் செய்தியாளர் ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன் சித்தார்த்தை சந்தித்தார்.
இந்த நேர்காணலில் இப்போதைய அரசியல், கருத்துச் சுதந்திரம், போலி செய்திகள் என சினிமாவை கடந்து பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார் சித்தார்த்.
“நான் ஆக்டிவ் பாலிடிக்ஸுக்கு வரமாட்டேன். அதை நான் உறுதியாகச் சொல்கிறேன். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் திட்ட முடியாது. இப்போது தவறு யார் செய்கிறார்கள் என்று பார்க்காமல்.. தவறு என்ன என்று பார்த்து என்னுடைய கருத்தை நான் பதிவு செய்கிறேன்.” என்றார்.
மேலும், “என் சிறிய வயதில் தேர்தல் என்பது வேறு மாதிரியாக இருந்தது. தேடித் தேடி படிப்போம். கருத்துக் கணிப்புகளைப் பார்ப்போம். ஆனால், இப்போது எல்லாம் கத்து கத்து என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் சேர விரும்பவில்லை.
கருத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லக் கூடாது. கருத்து கூறினால் பயனாக இருக்குமென்றால் கருத்து கூறலாம். கும்பலாகக் கத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.” என்றார்.
பத்திரிகையாளர்கள், ஊடகங்களின் நடுநிலை, ஃபேக் நியூஸ், தமிழ் சினிமாவின் இன்றைய நிலை, சினிமா வெளியீட்டில் உள்ள பிரச்சனை என பல விஷயங்கள் குறித்துப் பேசி இருக்கிறார் நடிகர் சித்தார்த்.