குவைத் நாட்டின் பிரபல வணிக வளாகம் ஒன்றில் புர்கா அணிந்த பெண்ணை ஒருவர் ரவுண்டுக் கட்டி, பிளந்துக் கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து, அந்த நபரை கைது செய்ய வேண்டும் என உலகளாவிய அளவில் சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
அந்த வீடியோவில் உள்ள பதிவின்படி, நிராயுதபாணியாக தனியாக இருக்கும் அந்தப் பெண்ணை அந்நபர் முரட்டுத்தனமாக தாக்குகிறார். விலக்க வரும் நபர்களிடமும் வம்புக்குப் போகிறார். அடிதாங்க முடியாத அந்தப் பெண் கடைசியாக அங்கு கீழே கிடக்கும் ஒரு ‘மாப்’பை தூக்கிக் கொண்டு அவரை அடிக்கப் பாய்கிறார்.
குவைத் நாட்டில் இருந்து வெளியாகும் ‘அல் வட்டான்’ அரபு நாளிதழின் நிருபர் மூலமாக இந்த வீடியோ வெளியானதையடுத்து, தற்போது யூடியூப் வழியாக வைரலாக பரவி வருகிறது.
அடிக்கும் நபரும் – அடிபடும் பெண்ணுக்கும் என்ன உறவு? என்ன பகை? எதற்காக அந்தப் பெண்ணை அவர் இப்படி கண்மூடித்தனமாக தாக்குகிறார் என்பது தொடர்பான தகவல் ஏதும் தெரியவில்லை.
இந்த வீடியோவை சமூகவலைத்தளங்கள் வாயிலாகக் கண்டு கொதிப்படைந்த சமூக ஆர்வலர்கள், ஈவிரக்கமின்றி, பொது நாகரிகமற்ற முறையில், இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட அந்நபரை கைது செய்ய வேண்டும் என விமர்சித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், இந்த வீடியோவை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குவைத் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக ‘அல் வட்டான்’ அரபு நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.