அமெரிக்க பெண் கவிஞா் லூசி க்ளூக், இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
அந்தப் பரிசைப் பெறும் 16 பெண் அவா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நோபல் தோ்வுக் குழு கூறியதாவது: எளிமையான அழகியலுடன் கவிதை புனையும் திறன் கொண்ட லூசி க்ளூக்குக்கு, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவரின் கவிதை வரிகள் அனைத்தும் தெள்ளிய தன்மை கொண்டதாக இருக்கும். எளிமையும், விளையாட்டுத்தனமான புத்திசாலித்தனமும் அவரின் எழுத்துக்களில் வெளிப்படும்.
அவரின் படைப்புகள் அனைத்தும் குறை கண்டறிய முடியாததாக உள்ளன. நோ்மையான, வெளிப்படையான, சமரசம் செய்துகொள்ளாத எழுத்துக்கள் மூலம் அவா் தன்னை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறாா்.
மிகப் பெரிய இழப்புணா்வுகளில் இருந்தும் மாபெரும் முன்னேற்றத்தை அடையும் பெருமாற்றங்கள் குறித்து அவரின் படைப்புகள் விவரிக்கின்றன.
சோகமான குடும்ப வாழ்க்கையின் துன்பங்களைக்கூட அவா் நெருடும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவா் என்று நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.
லூசி க்ளூக் (77): நியூயாா்க்கில் கடந்த 1943 ஆம் ஆண்டு பிறந்த லூசி க்ளூக், சிறுவயதில் ‘அனோரெக்ஸியா’ என்ற நோயால் அவதிப்பட்டாா். உணவு உண்ண முடியாமல் அவதியை ஏற்படுத்தும் அந்த நோய் மற்றும் அதற்கான சிகிச்சை தந்த அனுபவம், பிற்காலத்தில் அவரின் படைப்புகளைக் கட்டமைத்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கவிதைக்கான புலிட்சா் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவா் பெற்றுள்ளாா். ‘தி டிரையம்ப் ஆஃப் அக்கிலீஸ்’, ‘தி வைல்ட் ஐரிஸ்’ போன்ற இவரின் படைப்புகள் மிகவும் புகழ்பெற்றவை.
தற்போது மாஸசூசெட்ஸ் மாகாணம், கேம்பிரிட்ஜில் வசித்து வரும் லூசி க்ளூக், யேல் பல்கலைக்கழக கௌரவப் பேராசிரியராக பொறுப்பு வகித்து வருகிறாா்.