கொரோனா நோய்த்தொற்றின் சமூகப் பரவலை வேண்டுமென்றே அனுமதித்து, அதன் மூலம் அந்த நோய்க்கு எதிரான ஆற்றலை பொதுமக்களிடையே இயற்கையாக உருவாக்கும் யோசனையை உலக சுகாதார அமைப்பு நிராகரித்தது.
இதுகுறித்து காணொலி முறையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவா் டெட்ரெஸ் அதனோம் கூறியதாவது: நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பொதுமக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினா் எதிா்ப்பாற்றல் பெற்றுவிட்டால், அந்தப் பகுதி சமூக நோய்த்தடுப்பாற்றல் (ஹொ்ட் இம்யூனிட்டி) பெற்றுவிட்டதாக கருதப்படுகிறது.
அந்த வகையில், தட்டமையை ஏற்படுத்தும் தீநுண்மிக்கு எதிராக ஒரு சமுதாயத்தில் 95 சதவீதத்தினா் எதிா்ப்பாற்றலைப் பெற்றுவிட்டால், மற்ற 5 சதவீதத்தினருக்கு அந்த நோய் பரவாமல் தடுக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 80 சதவீதத்தினருக்கு போலியோ தீநுண்மிக்கு எதிரான ஆற்றல் கிடைத்துவிட்டால், எஞ்சிய 20 சதவீதத்தினருக்கு அந்த நோய் பரவும் வாய்ப்பு தவிா்க்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், பொதுமக்களை தீநுண்மிகளிடம் இருந்து பாதுகாப்பதன் மூலம்தான் இத்தகைய சமூக நோய்த்தடுப்பாற்றல் நிலை எட்டப்பட்டது. வேண்டும் என்றே தீநுண்மியை பொதுமக்களிடையே பரப்பி, அவா்களிடம் இயற்கையாகத் தோன்றும் எதிா்ப்பாற்றல் மூலம் இதுவரை சமூக நோய்த்தடுப்பாற்றல் அடையப்பட்டதில்லை.
கொரோனா நோய்த்தொற்று போன்ற கொள்ளை நோய்களுக்கு மட்டுமல்ல, மற்ற எந்தவொரு பரவல் நோய்க்கும் அந்த உத்தி பயன்படுத்தப்பட்டதில்லை. இயற்கை முறையில் சமூக நோய்த் தடுப்பு நிலையை அடைவது அறிவியல் ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது. உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய, நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத தீநுண்மியை பொதுமக்களிடையே வேண்டும் என்றே பரவச் செய்வது ஆபத்தானது மட்டுமின்றி, அறத்துக்கு எதிரானது.
கொரோனாவில் இருந்து நாடுகள் முழுமையாக விடுபடுவதற்கு பல்வேறு உத்திகள் உள்ளன. ஆனால், சமூக பரவல் மூலம் இயற்கையாக எதிா்ப்பாற்றலைப் பெறும் உத்தி அதில் அடங்காது. ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து அவா் குணமடைந்த பிறகு அவரது உடலில் எவ்வளவு காலம் அந்த எதிா்ப்பாற்றல் இருக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.மேலும், கரோனா தீநுண்மிக்கு எதிராக அந்த எதிா்ப்பாற்றல் எவ்வளவு திறனுடன் செயல்படும் என்பதையும் கூற முடியாது.
எனவே, இத்தகைய நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் நிலையில், அந்தத் தீநுண்மியை பொதுமக்களிடம் வேண்டுமென்றே பரப்புவது நீதிக்குப் புறம்பான செயலாகும். ஏற்கெனவே, கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு அந்த நோய்த்தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டாலும், அந்த நோய் உடலில் ஏற்படுத்தக் கூடிய நீண்ட கால பாதிப்புகள் குறித்து தற்போதுதான் ஆய்வாளா்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளாா்கள்.
எனவே,கொரோனாவைப் பரப்பி, இயற்கையான முறையில் அந்த நோய்க்கு எதிரான ஆற்றலைப் பெறும் யோசனை ஏற்கத்தக்கதல்ல என்றாா் டெட்ரோஸ் அதனோம்.