உலகளாவிய வளர்ச்சிக்கு காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளதாக பன்னாட்டு செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. திடீர் மழைப்பொழிவு, அதிகரிக்கும் புயல்கள், உயரும் வெப்பநிலை போன்றவற்றால் சூழலியலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் 52 நாடுகளின் நிதியமைச்சர்கள் பங்கேற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பன்னாட்டு செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா, ”கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் உலக நாடுகள் தங்கள் நிதிகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தைக் குறைக்கவும், காலநிலை மாற்ற பாதிப்பை உணர்ந்து பசுமை முதலீடுகளை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அவர் அவ்வாறு செய்தால், 15 ஆண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை சராசரியாக 0.7% உயர்த்த முடியும் எனக் குறிப்பிட்டார்.
“காலநிலை மாற்றம் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு ஆழ்ந்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகளாவிய கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பசுமை முதலீடுகளில் கவனம் செலுத்துவதை உறுதி செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.” என கிறிஸ்டலினா தனது உரையில் தெரிவித்தார்.