உலகம் முழுவதும் 13 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ள கொரோனா தீநுண்மி கண்டறியப்பட்டு செவ்வாய்க்கிழமையுடன் (நவ.17) ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 55 வயது நபருக்கு கொரோனா தீநுண்மி தாக்கியது கடந்த ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி கண்டறியப்பட்டது. அவரே கொரோனா தொற்று தாக்கிய முதல் நபராக அறியப்படுகிறார்.
அதன் பிறகு ஓராண்டுக்குள் உலகையே ஆட்டிப்படைத்துள்ளது கொரோனா தீநுண்மி. அதற்குள் உலகம் முழுவதும் 5.5 கோடி பேரை இந்தக் கிருமி தாக்கியதுடன், அவர்களில் 13 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரையும் பறித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதிக்குப் பிறகு, ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் ஒரு வகை நிமோனியா தொற்று பரவுவதாக, சீனாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, ஹுனான் கடல் உணவு சந்தையில் உள்ள சில வியாபாரிகளுக்கும் முகவர்களுக்கும் அந்த தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஜனவரி 11, 12 திகதிகளில் கொரோனா தீநுண்மி பற்றிய தகவல்களை சீனா, வெளியுலகுக்கு பகிரத் தொடங்கியது. இதை அடுத்து, உலக சுகாதார அமைப்பின் மருத்துவக் குழுவினர் ஆய்வுக்காக சீனாவின் வூஹான் நகருக்குச் சென்றனர். ஜனவரி 30 ஆம் திகதி, கொரோனா தீநுண்மி பரவலை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ் அறிவித்தார்.
அதே நாளில், இந்தியாவில் முதல் கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டார். வூஹான் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் கேரளத்தைச் சேர்ந்த மாணவி, சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
அதன் பின்னர், பெப்ரவரியில் பயணம் மேற்கொள்வோருக்கும், மக்கள் ஒன்றாகக் கூடுவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது. மார்ச் 11 ஆம் திகதி, கொரோனா தீநுண்மி பரவலை பெருந்தொற்றாக அந்த அமைப்பு அறிவித்தது. இந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் திகதி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
நவம்பர் 17 ஆம் திகதி நிலவரப்படி, ஓராண்டில் இந்தியாவில் மொத்தம் 8,874,290 பேரை கொரோனா தீநுண்மி தாக்கியுள்ளது. அவர்களில், 130,519 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.
பாதிப்பு: 5.5 கோடி (55,943,122)
பலி: 13.43 லட்சம் (1,343,378)
மீட்பு: 3.89 கோடி (38,963,186)