எவரெஸ்ட் சிகரத்தின் மறுமதிப்பீடு செய்துள்ள 8848.86 மீட்டர் உயரத்தை சீனாவுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை நேபாளம் அறிவித்தது.
இதுதொடா்பாக நேபாள நில மேலாண்மை துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறியது:
கடந்த 1954 ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீட்டா் என அறிவிக்கப்பட்டது.
உலகின் மிக உயா்ந்த மலையான எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று விவாதம் எழுந்தது.
இதனைத்தொடா்ந்து அந்தச் சிகரத்தின் உயரத்தை அளவிட்டு மறுமதிப்பீடு செய்யும் பணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் நேபாளம் தொடங்கியது.
இந்த பணி தற்போது நிறைவு பெற்று மறுமதிப்பீடு செய்யப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன்படி மறுமதிப்பீட்டு உயரம் 8848.86 மீட்டரை நேபாளம் அறிவித்தது.