பிரபல சினிமா பின்னணி பாடகியான சுனிதா, தமிழில் விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெற்ற ‘காதல் சொல்வது…’ பாடல் உள்பட பல படங்களில் பாடி இருக்கிறார். இளையராஜா இசையிலும் பாடி இருக்கிறார். இவர் தமிழைவிட தெலுங்கில் தான் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். சில நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார். படங்களிலும் நடித்திருக்கிறார்.
பாடகி சுனிதாவுக்கு 19 வயதிலேயே திருமணம் முடிந்தது. பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் ஸ்ரேயா பாடகியாக இருக்கிறார். 42 வயதாகும் சுனிதா இன்னொருவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அவர் அதனை மறுத்தார்.
இந்நிலையில் சுனிதா தற்போது 2-வது திருமணத்துக்கு தயாராகி உள்ளார். அவருக்கு ராம் வீரபனேனி என்ற தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. எனது வாழ்க்கையில் நல்ல நண்பராக ராம் நுழைந்து உள்ளார். விரைவில் நாங்கள் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறோம் என்று சுனிதா கூறியுள்ளார்.