2020 ஆம் ஆண்டு ட்விட்டரில் மக்களால் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்களில் டிரம்ப், பைடன் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் ட்விட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட (ட்வீட் செய்யப்பட்ட) நபர்கள் குறித்த பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் குறித்து மக்கள் அதிகம் ட்வீட் செய்துள்ளனர். அவரைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
ட்விட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 7 ஆம் இடத்தைப் பெற்றிருக்கிறார்.
இந்திய அமெரிக்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் இந்தப் பட்டியலில் உள்ள ஒரே பெண் ஆவார். இவர் 10 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ரேப்பர் கன்யே வெஸ்ட் மற்றும் மறைந்த கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரையன்ட் ஆகியோரும் அடங்குவர்.
தற்போதைய சூழ்நிலையில் அரசியல் மாற்றத்திற்கான ஒரு முக்கிய தளமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உள்ளன என்பதும் இதன் மூலமாகத் தெரிகிறது.
அதேபோன்று இந்த ஆண்டு மக்கள் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான ஹேஷ்டேக்காக #COVID19 இருந்துள்ளது. இந்த ஹேஷ்டேக் 400 மில்லியன் (40 கோடி) முறை ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று இரண்டாவதாக அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொலை குறித்து அதிகம் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.