தமிழ் படஉலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அசின். ‘கஜினி’ படம் மூலம் இந்திக்குப்போனார். அங்கும் முதல் படத்திலேயே பிரபலமானார். சல்மான்கான், அஜய்தேவ்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன் போன்றோருடன் நடித்தார். நடிகைகளையும், கதாநாயகர்களையும் இணைத்து கிசுகிசுக்கள் வருவது வழக்கம்.
அவற்றில் சில உண்மையாகவும், மற்றவை வதந்தியாகவும் இருப்பது உண்டு. அசினும் இதற்கு தப்பவில்லை. தன்னுடன் ஜோடியாக நடித்த சல்மான்கானுடன் இணைத்துப்பேசப்பட்டார். இருவரும் காதலிப்பதாகவும், காதல் பரிசாக அசினுக்கு சொகுசு வீடு ஒன்றை சல்மான்கான் வாங்கி கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை இருவரும் மறுத்தனர்.
அதன்பிறகு, அபிஷேக்பச்சனுடன் நெருங்கிப்பழகுவதாகவும் செய்திகள் வந்தன. தற்போது அசினுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. மொபைல் நிறுவன அதிபர் ராகுல்சர்மாவை மணக்க உள்ளார். இந்த நிலையில், கதாநாயகர்களுடன் இணைத்து வந்த செய்திகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
‘‘என் திரையுலக வாழ்க்கை நன்றாகப்போகிறது. சில வதந்திகளும் என்னைப்பற்றி வந்தன. அதற்காக வருந்தவில்லை. என்னைப் பொறுத்தவரை, எந்த கதாநாயகனுடனும் நான் நெருங்கிப்பழகியது இல்லை. ஒவ்வொருவருடனும் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது. எப்போதும் நான் ஒதுங்கியே இருந்தேன். சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்’’. இவ்வாறு அசின் கூறினார்.