தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.
காய்ச்சல், சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தாா்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 630 மினி கிளினிக் அமைக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.
சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி அவர் தொடங்கி வைத்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜய பாஸ்கர், ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பர். கிளினிக் காலை 8-12 மணி வரையும், மாலை 4-8 மணி வரை என 8 மணி நேரம் செயல்படும்.
கிளிக்கில் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யலாம். சென்னையில் முதல்கட்டமாக 47 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. கிராமப்புறம் 1,400, சென்னையில் 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் கிளினிக்குகள் 200 அமைக்கப்படுகின்றன.