பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளது.
ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். 1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன ஆனந்த், 2000-ம் ஆண்டில், முதல்தடவையாக உலக சாம்பியன் ஆனார். தொடர்ந்து 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்று சாதனை செய்தார். சூசன் நினனுடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்கிற சுயசரிதை நூலை எழுதியுள்ளார்.
இந்நிலையில் விஸ்வநாதனின் ஆனந்தின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படத்தைப் பிரபல ஹிந்தி இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்குகிறார்.
2013-ல் தனுஷ் நடித்த ரான்ஜானா என்கிற ஹிந்திப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கினார். தற்போது, ஆனந்த் எல். ராய் – தனுஷ் கூட்டணி, அத்ராங்கி ரே என்கிற படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்ததாக விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கவுள்ளார்.