முதல்வர் பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் அடங்கிய 97 பக்க பட்டியலை ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 10.30 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், 2011-16 அதிமுக ஆட்சி ஊழல்கள் குறித்து மக்களுக்குத் தெரியும். நான்கு வருடத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
முதல்வர் பழனிசாமி மீது உலக வங்கி நிதி தொடர்பான ஊழல், நெடுஞ்சாலைத் துறை தொடர்பான ஊழல், அரிசியை வெளிச்சந்தையில் விற்ற ஊழல், வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்பு ஊழல், துணை முதல்வர் ஓபிஎஸ் மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துகுவிப்பு ஊழல் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான புகார்கள் ஆதாரங்களுடன் ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.
ஏற்கெனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால் ஆளுநரிடம் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் கொடுப்போம். புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்றார்.