பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 81.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு – கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை செய்தார்.
80 களில் பல சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களுக்கு வானொலியில் வர்ணனை செய்துள்ளார். இதன்பிறகு ஈஎஸ்பின், நியோ ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டுத் தொலைக்காட்சிகளிலும் தமிழ் வர்ணனை செய்துள்ளார்.
மூன்று நூல்களும் எழுதியுள்ளார். அழைத்தார் பிரபாகரன் என்கிற நூலில் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த அனுபவங்களை எழுதியுள்ளார். ஆடியோ நூல்களிலும் பங்களித்துள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அப்துல் ஜப்பார் இன்று காலமானார்.
அப்துல் ஜப்பாரின் மறைவுக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.