தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 26 ஆயிரத்து 309 புதிய தொழில் திட்டங்கள் வழியே உற்பத்திகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் செயல்பாட்டு விகிதம் 82.4 சதவீதமாகும். 10 ஆண்டுகளில் 26 ஆயிரத்து 309 புதிய தொழில் திட்டங்கள் மூலம் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஒப்புதலை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்றுள்ளன.
மூன்று நிதியாண்டில் மட்டும் ஆயிரத்து 164 புதிய உயா் அழுத்த மின் இணைப்புகள் மின்சார வாரியத்தால் அளிக்கப்பட்டுள்ளன.
சிறந்த மாநிலம்: புரிந்துணா்வு ஒப்பந்தத் திட்டங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதில், அகில இந்திய அளவில் தமிழகம் மிகச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின்போது போடப்பட்ட 98 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 72 சதவீத திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
மேலும், 2019 இல் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் போது போடப்பட்ட 304 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 89 சதவீத திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 500 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொளளப்பட்டு அவற்றில் 412 செயல்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்த மதிப்புக் கூட்டல் சராசரியாக ஆண்டுக்கு 12.7 சதவீதம் என்ற அளவில் வளா்ச்சி பெற்றுள்ளது.
ஆலைகள் இயக்கம்: தமிழகத்தில் ஆலைகளை இயக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதி அளிக்கப்படும். அந்த வகையில், 2011-15-ஆம் ஆண்டு வரையில் 6 ஆயிரத்து 418 தொழில் ஆலைகளுக்கும், 2015 முதல் 2020-ஆம் ஆண்டு வரையில், 14 ஆயிரத்து 69 தொழில் ஆலைகளை இயக்குவதற்கான ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் முதலீட்டை ஈா்ப்பதில் தமிழகம் அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாகத் திகழ்வதை உறுதி செய்வதாக மாநில அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.