புதிய பாராளுமன்ற கட்டடம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்படவுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றை கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் புதிய பாராளுமன்றக் கட்டடம் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் அமரக்கூடிய வகையில் கட்டப்படவுள்ளது.
அதன் கட்டுமானப் பணிகளை வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய தலைமைச் செயலகத்தை 2024 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், கடந்த நவம்பா் மாதம் 5 ஆம் திகதி வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தது. எனினும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அடிக்கல் மட்டும் நாட்டுவதற்கு கடந்த டிசம்பா் மாதம் 7 ஆம் திகதி அனுமதி அளித்தது. இதை அடுத்து அந்த திட்டத்துக்கு டிசம்பா் 10 ஆம் திகதி பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து, சென்ட்ரல் விஸ்டா திட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்க உள்ளது.