இங்கிலாந்து அணியால் தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெல்ல முடியுமா என தெரியவில்லை என்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கெளதம் கம்பீர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 5 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, டாம் பெஸ், ஜேக் லீச் என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் மொயீன் அலி 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 181 விக்கெட்டுகளையும், டாம் பெஸ், ஜேக் லீச் ஆகியோர் தலா 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முறையே 31 மற்றும் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்தும், அதன் வெற்றி வாய்ப்பு குறித்தும் கெளதம் கம்பீர் கூறியிருப்பதாவது:
இங்கிலாந்து அணியால் தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெல்ல முடியுமா என தெரியவில்லை. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 3 – 0 என்ற கணக்கிலோ அல்லது 3 – 1 என்ற கணக்கிலோ வெல்ல வாய்ப்புள்ளது. அதிலும் பகலிரவு போட்டியாக நடைபெறும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு 50 சதவீத வெற்றி வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இலங்கையில் சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் குவித்திருக்கலாம். ஆனால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கு முற்றிலும் வித்தியாசமான சவாலாக இருக்கும். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்வது கடும் சவாலாக இருக்கும்.
அவுஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக பந்துவீசி தொடரை வென்றுள்ளதால், அஸ்வின் மிகப்பெரிய நம்பிக்கையோடு களமிறங்குவார். எனவே, இந்தத் தொடர் இங்கிலாந்துக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்றார்.