கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து 296 செல்லிடப்பேசி செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் சஞ்சய் தோத்ரே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல்-தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் சஞ்சய் தோத்ரே வியாழக்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து 296 செல்லிடப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் அந்தச் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
சில சீன செயலிகள், பயனாளா்களின் நிதி, தனிப்பட்ட தகவல்களைத் திருடி சட்ட விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. அந்த அமைச்சகம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
நாட்டில் இணைய பயன்பாடும், பல்வேறு செயலிகளின் பயன்பாடும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக பயனாளா்களின் தனிப்பட்ட தகவல்களை செயலிகள் எளிதில் சேகரித்து விடுகின்றன. அத்தகவல்களைப் பாதுகாக்கும் நோக்கில் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு நடத்தி வருகிறது என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 2.9 லட்சம் இணையவழி குற்றங்கள்: மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு அமைச்சா் தோத்ரே அளித்த பதிலில், கடந்த ஆண்டில் மட்டும் இணையவழி பணப்பரிவா்த்தனை தொடா்பாக 2,90,445 இணையவழி குற்றங்கள் நடைபெற்றன. இது கடந்த 2019-ஆம் ஆண்டில் 2,46,514-ஆகவும், கடந்த 2018-ஆம் ஆண்டில் 1,59,761-ஆகவும் இருந்தது.
பிரபல வங்கிகள், நிதி நிறுவனங்களின் பெயரில் மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை அனுப்பி கடவுச்சொல்லைக் கோருவது, வலைதளத்தை முடக்குவது உள்ளிட்டவை அந்தக் குற்றங்களில் அடங்கும். வங்கி சாரா நிதி நிறுவனங்கள், இணைய வழி வா்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் வளா்ச்சியால் இணையவழி பணப்பரிவா்த்தனை அதிகரித்துள்ளதன் காரணமாகக் குற்றங்களும் அதிகரித்துள்ளன. அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.