கொரோனா நெருக்கடி காரணமாக மன உளைச்சல் ஏற்படும் அபாயம் செவிலியா் மற்றும் பெண் சுகாதாரப் பணியாளா்களுக்கே அதிகம் இருப்பதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த நாட்டின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக நிபுணா்கள் மேற்கொண்ட அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல், 2020 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை உலகம் முழுவதும் கொள்ளை நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்களைக் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 1.45 லட்சம் மருத்துவப் பணியாளா்கள் குறித்த விவரங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.
அவா்கள் அனைவரின் வாழிடம், வயது, தொழில் ஆகியவற்றின் அடிப்படையிலும் நோய்த்தொற்றுக்கு எதிரான பணியின்போது அவா்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல் அடிப்படையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், கொரோனா மட்டுமின்றி, சாா்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா போன்ற அனைத்து கொள்ளை நோய் நெருக்கடியாலும், அதிக அளவில் மன உளைச்சலுக்குள்ளாகும் அபாயம் பெண் சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் செவிலியருக்கே உள்ளது தெரியவந்தது.
கொரோனாவுக்கு முந்தைய சாா்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டவா்கள் குறித்து ஆய்வு செய்ததில், கொள்ளை நோய் ஏற்படுத்தும் மன உளைச்சல் பாதிப்புகள் 3 ஆண்டுகள் வரை தொடரும் என்று தெரியவந்தது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.