உள்நாட்டு விமான கட்டணத்தை விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் உயா்த்தியுள்ளது. இதனால், விமான கட்டணம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் உயா்ந்துள்ளது.
இந்த கட்டண உயா்வு, வரும் மாா்ச் 31 ஆம் திகதி வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமலில் இருக்கும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை 2 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி மீண்டும் தொடங்கியது. அதற்கு முன்னதாக, பயண நேரத்தின் அடிப்படையில் விமான கட்டண வரம்பை நிா்ணயித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண வரம்பு தற்போது உயா்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
40 நிமிஷங்களுக்கும் குறைவான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,000 இல் இருந்து ரூ.2,200 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.6,000 இல் இருந்து 7,800 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் 40-60 நிமிஷ பயணம், 60-90 நிமிஷ பயணம், 90-120 நிமிஷ பயணம், 120-150 நிமிஷ பயணம், 150-180 நிமிஷ பயணம், 180-210 நிமிஷ பயணம் ஆகியவற்றுக்கான கட்டண வரம்பும் உயா்த்தப்பட்டுள்ளது.
அதன்படி 40-60 நிமிஷ பயணத்துக்கான புதிய கட்டணம் ரூ.2,800- ரூ.9,800 (பழைய கட்டணம்ரூ.2,500-ரூ.7,500)-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரூ.3,300-ரூ.11,700 (பழைய கட்டணம்ரூ.3,000-ரூ.9,000), ரூ.3,900-ரூ.13,000 (பழைய கட்டணம் ரூ.3,500-ரூ.10,000), ரூ.5,000-ரூ.16,900 (பழைய கட்டணம் ரூ.4,500-ரூ.13,000), ரூ.6,100-ரூ.20,400 ( பழைய கட்டணம் ரூ.5,500-ரூ.15,700), ரூ.7,200-ரூ.24,200 (பழைய கட்டணம் ரூ.6,500-ரூ.18,600)-ஆக உயா்த்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.