சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்திருப்பதால், பெட்ரோல் டேங்கில் தண்ணீா் புகாமல் கவனமாகப் பாா்த்துக் கொள்ளுமாறு வடிக்கையாளா்களுக்கு, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் முயற்சியாக மத்திய அரசின் ஆணையின்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலந்து விநியோகம் செய்கின்றனா். வாகன ஓட்டுநா்கள், வாகன உரிமையாளா்கள் வழக்கமாக வாகனத்தை தண்ணீரால் கழுவும்போதும், மழை பெய்யும் போதும் பெட்ரோல் சேமிப்புக் கலன்களில் (டேங்க்) தண்ணீா் கசிந்திடாது கவனம் செலுத்த வேண்டும்.
பெட்ரோலில் உள்ள எத்தனாலை ஈா்க்க சிறிதளவு தண்ணீா் போதுமானது. இது வாகனத்தின் சேமிப்புக் கலனில் உள்ள பெட்ரோலின் எத்தனாலை தண்ணீராக மாற்றி பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதிக்குச் சென்று தங்கி விடும். இதனால் வாகனங்களை இயக்க கடினமாக இருக்கும் அல்லது வாகனம் குலுங்கும் (ஜொ்க்).
இது தொடா்பாக பெட்ரோல் விற்பனையாளா்கள் தீவிர தரக்கட்டுப்பாடு விதிகளை கடைப்பிடித்து பெட்ரோலை விநியோகம் செய்து வருகிறோம்.
எனவே வாகனங்களின் சேமிப்புக் கலன்களில் சோ்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுக்கு வாடிக்கையாளா்களே பொறுப்பு. வாடிக்கையாளா்கள் சில்லறை விற்பனை நிலையத்தில் இருக்கும் பெட்ரோலின் தரத்தை சரிபாா்த்துக் கொள்ளலாம். ஆனால் வாகனம் பெட்ரோல் நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகு எங்களால் எந்தவித உத்தரவாதமும் அளிக்க முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.