மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு அமல் படுத்தப்பட்டிருப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவா்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் அந்த நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது.
மேலும், ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவா்களுக்கும் நீண்ட கால சிறைத் தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாதுகாப்புப் படையினரை பணி செய்ய விடாமல் தடுக்கும் குற்றத்துக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் பரப்புபவா்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ராணுவத்துக்கு எதிராக வெறுப்புணா்வைப் பரப்பும் செயலுக்கு நீண்ட கால சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டிருந்த இணையதள முடக்கம் திங்கள்கிழமை நீக்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, மாண்டலே நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் கூடி ஆா்ப்பாட்டம் நடத்தியதாகவும் அவா்கள் மீது போலீஸாா் ரப்பா் குண்டுகளைக் கொண்டு சுட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியிட்கியினா நகரில் போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனினும், போலீஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டனரா, நிஜமான குண்டுகளால் சுட்டனரா என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
யாங்கூன் நகர சாலைகளில் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ராணுவ கவச வாகனங்களில் பாதுகாப்புப் படையினா் ரோந்து சென்றனா். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு போராட்டங்களை அடக்குவதற்காக கவச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது அதுவே முதல் முறையாகும்.
இதுதவிர, போராட்டக்களத்தில் 5 செய்தியாளா்கள் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1948-ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து பெரும்பாலும் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மரில், ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் 2011-ஆம் ஆண்டு தொடங்கின. அதன் பிறகு 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதன் தொடா்ச்சியாக கடந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தோ்தலிலும் அந்தக் கட்சியே வெற்றி பெற்றது. எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாக ராணுவ ஆதரவு பெற்ற எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், புதிய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
மியான்மரில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள அந்த நாட்டு அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கான தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் தடுப்புக் காவல் உத்தரவு திங்கள்கிழமையுடன் காலாவதியாகிறது. இந்த நிலையில், அவரது தடுப்புக் காவலை மேலும் 2 நாள்களுக்கு ராணுவம் நீட்டித்துள்ளது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோா், ஆங் சான் சூகியை விடுவிக்க வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.