பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ரம்யா. இவர் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில்கூட, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ரம்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருக்கும், அப்ரஜித் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. இவர்களது திருமணம், திருமண வரவேற்புக்கு ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தது. இந்நிலையில், இவர்களது திருமண வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டு விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தது. ஆனால், இதுகுறித்து இருவரும் வாய் திறக்காமலே இருந்து வந்தனர்.
தற்போது, இந்த செய்தியை ரம்யா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எனது திருமண பந்தம் முறிந்துபோனது. இது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். இந்த அறிவிப்பின் மூலம் என்னைப் பற்றி வரும் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். திருமண பந்த முறிவு என்பது எனது தனிப்பட்ட பிரச்சினை. அது மிகவும் உணர்வுப்பூர்வமானது.
எனது தனிப்பட்ட சுதந்திரத்திற்குள் யாரும் அத்துமீறி பிரவேசிக்க வேண்டாம். இதை எனது ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளாக முன்வைக்கிறேன். இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினையை இத்தோடு விட்டு விடுங்கள். தற்போது எனது கவனம் முழுவதும் எனது பணியின் மீதே இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால், எந்த காரணத்திற்காக இருவரும் பிரிகிறார்கள் என்பது குறித்து ரம்யா எதுவும் கூறவில்லை.