பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். ஜூனியர் என்டிஆர், 2001 முதல் தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் ஜூனியர் என்டிஆர். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:
எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நலமாக உள்ளேன். நானும் எனது குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். மருத்துவர்களின் அறிவுரைப்படி அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம். சமீபமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்றார்.