76 ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா். மேலும், ஐ.நா.வுக்கான ஆப்கன் தூதராக சுஹைல் ஷாஹீனை நியமித்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸுக்கு தலிபான்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
செப்டம்பா் மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறும் 76 ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புகிறோம்.
ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி, கடந்த மாதம் 15 ஆம் திகதி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அவரை உலக நாடுகள் இனியும் ஆப்கன் அதிபராக அங்கீகரிக்கவில்லை. எனவே, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் சாா்பில் நாங்கள்தான் பங்கேற்க முடியும்.
ஐ.நா.வுக்கு முந்தை அரசால் நியமிக்கப்பட்ட தூதா் கிராம் ஐசக்ஸாயின் பணிகள் நிறைவடைந்துவிட்டன. எனவே, அவரை இனியும் ஆப்கானிஸ்தானின் பிரதிநிதியாகக் கருத முடியாது.
புதிய தூதராக முகமது சுஹைன் ஷாஹீனை நியமித்துள்ளோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பா் 20 ஆம் திகதியிடப்பட்ட அந்தக் கடிதம், ‘ஆப்கன் இஸ்லாமிய அமீரகம்’ என்ற முத்திரையின் கீழ், வெளியுறவுத் துறை அமைச்சா் அமீா் கான் முத்தக்கியின் கையொப்பத்துடன் ஐ.நா. பொதுச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குட்டெரெஸின் துணை செய்தித் தொடா்பாளா் ஃபா்ஹான் ஹக் தெரிவித்தாா்.
இந்த இரு தகவல்கள் குறித்தும் ஐ.நா. பொதுச் சபை தலைவருடன் ஆலோசனை நடத்திய பிறகு, 76-ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின் அமைப்புக் குழுவுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.
அதையடுத்து, 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் ஆப்கானிஸ்தான் பிரதிநிதியாக யாரை ஏற்பது என்று அமைப்புக் குழு முடிவெடுக்கும்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சா் உரையாற்ற விரும்புவதாக ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.
அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னா் அங்கு தலிபான்களுக்கு எதிரானவா்களைக் கொண்டு புதிய அரசும் தேசிய ராணுவமும் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் அபோட்டாபாதில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.
அதன் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை படிப்படியாக திரும்ப அழைக்க அமெரிக்கா முடிவு செய்தது.
அந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகு வேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், நாடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த மாதம் 15 ஆம் திகதி கொண்டு வந்தனா்.