தென் ஆப்பிரிக்காவுடனான 3 வது டெஸ்ட் ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3 வது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் நேற்று தொடங்கியது.
முதல் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதன்பிறகு, நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா 43 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அஜின்க்யா ரஹானே 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.
தலைவர் கோலியுடன் இணைந்த ரிஷப் பந்த் ஓரளவு தாக்குப்பிடித்து பாட்னர்ஷிப் கட்டமைத்தார். இந்த இணை நம்பிக்கையளிக்கும் விளையாடி 5 வது விக்கெட்டுக்கு 51 ஓட்டங்கள் சேர்த்தது. கோலியும் அரைசதத்தைக் கடந்தார்.
இந்த நிலையில், 27 ஓட்டங்கள் எடுத்திருந்த பந்த் மார்கோ ஜான்சென் பந்தில் ஆட்டமிழந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 2, ஷர்துல் தாக்குர் 12, ஜாஸ்பிரித் பும்ரா 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பொறுப்பு விராட் கோலிக்கு அதிகரித்தது.
அவரும் பெரும்பாலான ஸ்டிரைக்கை தன் வசமே கொண்டு இந்திய அணியின் ஓட்டங்களை உயர்த்த முயற்சித்தார். இதனால், அவர் சதமடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவரும் 79 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ககிசோ ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். முகமது ஷமி கடைசி விக்கெட்டாக 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
77.3 ஓவர்களில் இந்திய அணி 223 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், டுவன் ஆலிவியர், கேசவ் மகாராஜ் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.