இந்தியா – டெல்லியில் முன் விரோதத்தில் பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவருக்கு செருப்பு மாலை அணிவித்து அழைத்து வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது, டெல்லி விவேக் விகார் பகுதியை சேர்ந்த திருமணமாகி குழந்தை இருக்கும் பெண் ஒருவரை, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலைக்கு இந்த பெண்தான் காரணம் என்று சம்பந்தப்பட்ட வாலிபரின் உறவினர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக அப்பெண்ணை கடத்தி சென்ற நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதோடு விடாமல் அப்பெண்ணின் முடியை வெட்டி, அவரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அவரை தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பார்த்து கரகோஷம் எழுப்பினர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அப்பெண்ணின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருவதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். முன் விரோதத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது துரதிஷ்டவசமானது என்றும் அனைத்து கோணத்திலும் விசாரித்து வருவதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், “இது மிகவும் வெட்கக்கேடானது. கிரிமினல்களுக்கு எப்படி இந்த அளவுக்கு துணிச்சல் வந்தது? இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு ஆளுநரும், உள்துறை அமைச்சரும் உத்தரவிடவேண்டும். டெல்லி மக்கள் இது போன்ற குற்றங்களையும், குற்றவாளிகளையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்றும் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுவும் குடியரசுத் தினத்தன்று இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.