ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் தாய்நாட்டை பாதுகாக்க களமிறங்கிய உக்ரைன் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான பாஷா லீ ரஷ்யப் படைகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.
உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதலுக்கான சைரன் எச்சரிக்கை ஒலிக்க விட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் உக்ரைனின் ராணுவத்தில் இணைந்து போராடிய உக்ரைன் நடிகர் பஷா லீ (33), கீவ் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் வீர மரணம் அடைந்துள்ளார்.
33 வயதில் தாய்நாட்டை பாதுகாக்க ரஷ்யாவிற்கு எதிரான போரில் களமிறங்கி போராடி வீர மரணம் அடைந்த நடிகர் பாஷா லீ-க்கு சக நடிகர்கள், ரசிகர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அனைவராலும் நன்கு அறியப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர், பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட துடிப்பான இளைஞர் பாஷா லீ -ஐ தேசம் இழந்துள்ளதாக பெரும்பாலான ரசிகர்கள் தங்களது அஞ்சலியில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியப் படைகள் தாக்கக்கூடும். எனவே, மக்கள் பாதுகாப்பாக நிலவறைக்குள் சென்று பதுங்கிக்கொள்ளுமாறு உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புதின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதில் இருந்து இதுவரை உக்ரைனில் பொதுமக்கள் 406 பேர் பலியாகி உள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை 801 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.