மும்பை விமான நிலையத்தில் குட்டை கவுன் அணிந்த பெண்ணை விமானத்தில் ஏறவிடாமல் ஊழியர்கள் தடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் ஒருவர் கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் மும்பை வந்து, அங்கிருந்து புதுடெல்லிக்கு செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் செல்ல ஆயத்தமாகியுள்ளார். ஆனால் அந்த பெண் முழங்கால் நீள கவுன் அணிந்திருந்ததை காரணமாக கூறி அவரை விமானத்தில் ஏற்ற மறுத்துள்ளனர் இண்டிகோ விமான ஊழியர்கள். மேலும் அவரது உடை கண்ணியமாக இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவமானது சக பெண் பயணி புரபி தாஸ் என்பவரால் பேஸ்புக்கில் பகிரப்பட்டதால், தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புரபி தாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், இண்டிகோ விமானத்தில் பணிபுரியும் பெண்களின் சீருடைகள் முழங்கால் வரைதான் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உடை காரணமாக விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத அந்த பெண், தனது உடையை மாற்றிக்கொண்டு மற்றொரு விமானத்தில் டெல்லிக்கு போய் சேர்ந்துள்ளார்.