சென்னை வந்த திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை சந்தித்துப் பேசிய நடிகர் கமல்ஹாசன், இந்த சந்திப்பு தனக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் தந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கம் சார்பில் ‘அப்துல் கலாம் சேவா ரத்னா விருதுகள்-2015′ வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் தங்கியிருந்த அவரை நடிகர் கமல், கவுதமியுடன் நேரில் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பாக கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இன்று (நேற்று) காலை தலாய்லாமா அவர்களை சந்தித்தேன். அவரது இணக்கத்தையும், நோக்கத்தையும் மெச்சாதிருக்க முடியவில்லை.
காந்திஜியின் ரசிகனான நான், இவரை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை. நான் பகுத்தறிவாளனாக இருப்பதால் இது ஆன்மிகம் சார்ந்த சந்திப்பு இல்லை. எனினும், இந்த சந்திப்பு எனக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் தந்தது.
எனக்கு ஆன்மீக விஷயங்களில் எவ்வளவு ஈடுபாடில்லாமல் இருந்ததோ அதேபோல அவருக்கு சினிமா விஷயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை. ‘நான் இதுவரை ஒரு சினிமாவையும் பார்த்ததில்லை, தொலைக்காட்சியைக் கூட பார்த்ததில்லை’ என அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
ஆனாலும், எனது கலையின் மூலமாக இந்தியா உலகுக்கு அளித்த ‘அகிம்சை’ என்ற மிகப்பெரிய தத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என அறிவுரைத்தார்.
அகிம்சையின்பால் எனக்குமிருக்கும் நம்பிக்கையை அவரிடம் சொன்னேன், விரைவில் அந்த திசையில் பயணிப்பேன் என்றும் கூறினேன். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.