உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது.
போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன.
பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன.
முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளில் இருப்பவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தையே இதற்கு செலவிடுகின்றனர் எனவும், எனவே இப்படியான படங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளனர் எனக் கூற முடியாது எனறும் புகழ்பெற்ற உளவியல் மற்றும் பாலியல் சிகிச்சை வல்லுநர் டாக்டர் லாரி பெடீட்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நீலப்படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
உலகளவில் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களே மிகவும் அதிகப்படியாக நாளொன்றுக்கு சுமார் 13 நிமிட நேரம் இதற்காக செலவிடுவதாகவும், கியூபா நாட்டு மக்களே மிகக் குறைவாக ஐந்தரை நிமிடங்கள் செலவு செய்வதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரவு 11 மணி முதல் நள்ளிரவு முடியும் வரையிலான இரண்டு மணிநேரப் பகுதியே அதிகமானவர்கள் நீலப்படங்களை பார்க்கும் நேரமாகவுள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
பெண்கள் நீலப்படங்களைப் பார்ப்பதை பொருத்தவரை ஜமைக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இப்படங்களைப் பார்ப்பவர்களில் 44 சதவீதம் பெண்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களே அதிகமாக இப்படங்களில் ஆர்வம் காட்டுகின்றனர் எனக் கூறும் இந்த ஆய்வு நீலப் படங்களைப் பார்ப்பவர்களின் சராசரி வயது 35 எனவும் கூறுகிறது.
ஸ்மார்ட் ஃபோன் மூலம் 53% பேர் நீலப்படங்களைப் பார்க்கிறார்கள் என்றும், அவ்வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் இந்த எண்ணிக்கை 212% அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
மொபைல் தொலைபேசி மூலம் இப்படங்களைப் பார்ப்பவர்கள் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரித்துள்ளதாவும் இந்த ஆய்வின் முடிவுகளில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்களின் அதிகரிப்பு, இணையத்தின் வளர்ச்சி ஆகியவற்றாலேயே இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சென்னையிலுள்ள பாலியல் மருத்துவ வல்லுநர் டாக்டர் நாராயண ரெட்டி கூறினார்.
இந்தியாவில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது எதிர்பார்க்கப்பட்டதே எனவும் அவர் தெரிவித்தார்.