நடிகைகளைச் சுற்றி வதந்திகள் பரவுவது ஒன்றும் புதிதல்ல. அதுபோல்தான், தீபிகா படுகோனே பற்றி ஒரு புதிய வதந்தி கிளம்பியுள்ளது.
சினிமாவில் வதந்திகளுக்கு என்றைக்கும் பஞ்சமில்லை. அதுபோல், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பற்றி தற்போது புதிய வதந்தி ஒன்று பரவி வருகிறது. அதாவது, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பாகுபலி’.
இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் முதல் பாகம் மட்டும் வெளியாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. முந்தைய பாகத்தில் நடித்த பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் ஒருசில கதாபாத்திரங்களுக்கு சில நடிகர்களையும் இணைக்க திட்டமிட்டார். அதன்படி, ஸ்ரேயாவை ராணாவுக்கு மனைவியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
இதுகுறித்து படக்குழு வட்டாரங்களில் கேட்டபோது, தீபிகா படுகோனே இப்படத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்திகள் வெறும் வதந்திதான் என்று குறிப்பிட்டுள்ளனர். தீபிகா படுகோனே தற்போது ஹாலிவுட் படம் ஒன்றிலும், பாலிவுட்டிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கோச்சடையான்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.