கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 4-ந் திகதி முதல் அக்னி வெயில் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்து உள்ளது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு ‘சதம்’ அடித்து இருக்கிறது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைகளை நாடி வருகிறார்கள்.
இதனால் தர்பூசணி, பழஜுஸ், இளநீர் போன்றவற்றின் விலை அதிகரித்து உள்ளது.
காலை முதல் மாலை வரை குளிர்பான கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சுட்டெரிக்கும் வெயில் போக்குவரத்து பொலிஸாருக்கு பெரும் சவாலாக அமைந்து உள்ளது.
சிக்னல்களில் போக்குவரத்தை சரிசெய்யும் பொலிஸார் வெயிலின் தாக்கம் காரணமாக எளிதில் சோர்வடைந்து விடுகின்றனர்.
ஏற்கனவே சோர்வை தணிக்கவும், வெயிலை சமாளிக்கவும் சென்னையில் போக்குவரத்து பொலிஸாருக்கு மோர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெயில் காலம் முடியும் வரை போக்குவரத்து பொலிஸார் அனைவரும் தெர்மோகோல் மூலம் வடிவமைக்கப்பட்ட சோலார் தொப்பியை அணிந்து கொள்ள போக்குவரத்து மேலதிக ஆணையர் அபய்குமார்சிங் அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்த வகை தொப்பிகள் அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. அது இல்லாதவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளிடம் இலவசமாக பெற்று கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.