மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறின் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்ட பிறகு, லண்டனின் காட்விக் விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட வழக்கமான விமான சேவைகளை மேற்கொள்ளவும், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பெரும்பான்மையான விமான சேவைகளை இயக்குவதையும் தங்கள் நோக்கமாக கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் (பிஏ) தொழில்நுட்ப அமைப்பில் ஏற்பட்ட தீவிர பிரச்சனையால் சனிக்கிழமையன்று பல பயணிகளின் பயணத் திட்டங்கள் தடைபட்டு ஆயிரக்கணக்கானோர் தவிக்க நேர்ந்தது.
விமான நிலையங்களில் குழப்பமான காட்சியை கண்டதாக விவரித்த பயணிகளில் சிலர் போதுமான தகவல் அளிக்கவில்லை என பிஏ நிறுவனத்தை விமர்சனம் செய்தனர்.
இந்த பிரச்சனை தொடர்பாக மன்னிப்பு கோரிய பிரிட்டிஷ் ஏர்வேஸ், தாங்கள் வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பிச் செலுத்துவதாகவும், விரும்புபவர்களுக்கு மறுபதிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்துக்கு பயணம் செய்யும் முன், வாடிக்கையாளர்கள் தாங்கள் பயணம் செய்யும் விமானத்தின் தற்போதைய நிலை குறித்து அறிய www.ba.com என்ற தங்களின் வலைதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் நடந்த இணையத் தள தாக்குதலின் விளைவுதான் தற்போது ஏற்பட்ட இந்த கணனி பிரச்சனைகள் என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையென இந்த விமான சேவை நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான அலெக்ஸ் க்ரூஸ் இந்த பிரச்சனையின் அடிப்படை காரணம் ஒரு மின் விநியோகப் பிரச்சனைதான் என்று நம்பப்படுவதாக தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை பாதிப்பால் தவித்த பயணிகள்
லண்டனில் உள்ள இந்த இரு விமான நிலையங்களில் இருந்தும் புறப்படும் மற்றும் வந்துசேரும் மற்ற விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை.
இந்த தொழில்நுட்ப கோளாறினால் வாடிக்கையாளர் சேவை தொலைபேசி இணைப்புகள் உள்ளிட்ட பயணிகள் வருகை சரிபார்ப்பு மற்றும் செயல்பாட்டு அமைப்புகள் பாதிக்கப்பட்டன.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன பேச்சாளர் கூறுகையில், ”எங்களின் அனைத்து தொழில்நுட்ப அமைப்புகளையும் மீட்க நாங்கள் தொடர்ந்து கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், ”சனிக்கிழமை முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட விமான சேவையால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எவ்வளவு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்” என்று தெரிவித்தார்.