முன்னணி மலையேறும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான ஆடம் ஓன்ரா, உலகின் மிக கடினமான மலை முகட்டின் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
மலையேற்ற விளையாட்டில் ஒரு மலை முகடு ஏறுவதற்கு எவ்வளவு கடினமானது என்பதை அடிப்படையாகக் கொண்டு அதை தரவரிசைப்படுத்துவார்கள்.
நார்வே நாட்டில் உள்ள ப்ளாட்ஆங்கேரில் உள்ள கிரானைட் குகை, மிக உயர்ந்த தரவரிசையான 9சி தரவரிசையைப் பெற்றது. இந்த மலை முகட்டில் இதுவரை யாரும் ஏறியதில்லை. இந்தக் முகட்டின் மீது ஏற வேண்டும் என்பது பலருக்கும் வெறும் கனவாகவே உள்ளது.
செக் நாட்டவரான 24 வயது ஆடம் இந்த முகட்டின் மீது 20 நிமிடத்தில் ஏறினார்.
வெற்றிகரமாக மலை ஏறிய பிறகு,” எனது கண்களில் நீர் வழிந்ததை உணரமுடிந்தது” என்கிறார் ஆடம்.
“எனது பெற்றோர்கள் மலையேறும் வீரர்கள் என்பதால், சிறுவயதிலே என்னையும் மலையேறுவதற்காக அழைத்துச் செல்வார்கள். நானும் அவர்களைப் போல மலையேற வேண்டும் என விரும்பினேன்” என்கிறார் ஆடம்.
“தற்போது எனக்கு 24 வயது, நான் 20 வருடங்களாக மலையேறி வருகிறேன். பெரும்பாலும் ஸ்பெயின் மற்றும் நார்வேயிலே எனது மலையேற்றம் நடக்கும்” எனக் கூறுகிறார் ஆடம்.
“நார்வேவில் 9சி என வகைப்படுத்தப்பட்ட மலை முகட்டில் ஏறியது எனது பயணத்தின் பெருமைமிக்க தருணம். இதைச் செய்ய மிகுந்த அர்ப்பணிப்பு தேவைப்பட்டது.. ஆனால், இது ஒரு அற்புதமான அனுபவம்” எனவும் கூறுகிறார் ஆடம்.
2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்முறையாக இந்த மலை முகட்டுக்கு வந்து தாம் ஏறவேண்டிய பாதையில் துளைகள் இட்டுள்ளார்.
சொந்த நாட்டுக்கும் நார்வேவுக்கும் இடையில் அடிக்கடி வந்துபோன ஆடம் இந்தப் பாதையில் மலையேற நார்வேயில் 50 நாள் பயிற்சி செய்துள்ளார்.
“இந்த உலகத்தில் நான் இன்னும் நான் ஏற வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன”என்கிறார் ஆடம்.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக விளையாட்டு மலையேற்றம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன்பிருந்து அதற்கான பயிற்சியில் ஈடுபடவுள்ளார் இவர்.