திரிஷாவின் சினிமா வாழ்க்கை சாதாரண துணை நடிகையாகவே தொடங்கியது. ‘ஜோடி’ படத்தில் சிம்ரன் தோழியாக வந்தார். 1999-ல் இந்த படம் வெளியானது. அதன்பிறகு மூன்று வருடங்கள் படங்கள் இல்லாமல் சும்மா இருந்தார்.
பிறகு அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமான லேசா லேசா வெற்றிப்படமாக அமையவில்லை. 2002-ல் ‘மவுனம் பேசியதே’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. தொடர்ந்து திரையுலகில் ஏறுமுகம் ஆனார்.
விக்ரமுடன் நடித்த சாமி, விஜய்யுடன் நடித்த ‘கில்லி’ படங்கள் அவரை உச்சத்தில்கொண்டு வைத்தன. கமல்ஹாசனுடன் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ஜோடி சேர்ந்தார். கவுதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடித்த ஜெஸ்ஸி கதாபாத்திரம் ரசிகர்களை கிறங்க வைத்தது. ‘மங்காத்தா, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், ஆறு’ என பல படங்கள் அவரை முதல்தர நாயகியாக்கின.
தமிழ் படவுலக முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துவிட்டார். ரஜினிகாந்துடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை. அது ஒரு வருத்தமாகவே அவருக்கு இருக்கிறது. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் ஒரு படத்தில் நடித்துவிட்டார். புதுமுக கதாநாயகிகள் வரத்து அதிகம் இருப்பதால், போட்டி நிறைந்ததாக திரையுலகம் மாறிவிட்டது. ஒருசில படங்களுக்குமேல் தொடர்ந்து கதாநாயகியாக தாக்குப்பிடிப்பது கஷ்டம். இந்த போட்டியிலும் பதினைந்து வருடங்கள் கதாநாயகி இடத்தை திரிஷா தக்க வைத்துக்கொண்டு வருகிறார்.
காதல், திருமண முறிவு சர்ச்சைகளில் சிக்கியும் மார்க்கெட் சரியவில்லை. சமீபத்தில் அவரது 48-வது படமாக ‘சகலகலா வல்லவன்’ வந்தது. அடுத்து அவர் கைவசம் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் ‘தூங்காவனம்’, சுந்தர்.சி டைரக்ஷனில் நடிக்கும் ‘அரண்மனை’ 2-ம் பாகம் படங்கள் உள்ளன. இதோடு 50 படங்களில் நடித்துவிட்டார்.
‘தூங்காவனம்’ படப்பிடிப்பு இருதினங்களுக்கு முன் முடிவடைந்தது. விரைவில் இவ்விரு படங்களும் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.