இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் காலை 8 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
வாக்களித்துவிட்டு வெளியேவந்த பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை உடனடியாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:- நடிகர்களாகிய நாம் எல்லோரும் ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி. நமக்குள் என்றுமே ஒற்றுமை இருக்கும், இருக்க வேண்டும். சமீபகாலமாக (இந்த தேர்தல் தொடர்பாக) நடிகர்களுக்குள் வாக்குவாதம் நடைபெற்றது. இதைவைத்து, நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை என மக்களும், ஊடகங்களும் நினைத்து விடக்கூடாது.
ஒரு போட்டி வந்து விட்டது. வெரிகுட், இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு முன்கூட்டிய எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.அதேபோல், வெற்றி பெற்று பொறுப்புக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இரண்டு வேண்டுகோள்களையும் முன்வைக்கிறேன்.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை உடனடியாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும். இந்த தேர்தலில் போட்டியிடும் இரு அணிகளும் ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளன. பதவிக்கு வந்தவுடன் உயிரைக் கொடுத்தாவது அந்த வாக்குறுதிகளை எல்லாம் அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
அப்படி நிறைவேற்ற முடியாமல் போனால், உடனடியாக தங்களது பதவியை அவர்கள் ராஜினாமா செய்துவிட வேண்டும். இது, நீங்கள் மனநிம்மதியுடன் இருக்க உதவும். உங்களுக்கு நற்பெயரும் கிடைக்கும், மற்றவர்களுக்கு நீங்கள் எடுத்துகாட்டாகவும் இருப்பீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர்கள் விஜய், சரத்குமார், விஜயகுமார், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் அனைவரும் காலையில் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.